திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 'தவ்வை' சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் கால 'தவ்வை' சிற்பத்தை கண்டறிந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தில் பல்லவ மன்னன் நிருபதுங்க வர்மனது கல்வெட்டுகள் மற்றும் பல்லவர் கால சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
ஊரின் மேற்கில் ஏரி அமைந்துள்ளது. அதன் கிழக்கே வயல்வெளி பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இங்கு அதிகளவில் தண்ணீர் மூழ்கிய பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட 'தவ்வை' சிற்பம் காணப்படுகிறது.
கால்களை அகட்டி நின்றிருக்கும், தவ்வைக்கு அருகில் அவரது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.
சிற்பத்தில் காக்கை கொடியும் இடம் பெற்றுள்ளது. பல்லவர் கால கலைப்பாணிக்கு எடுத்துக் காட்டாக அழகான தலை அலங்காரத்துடன் காணப்படும் இந்த சிற்பத்தின், காலம் கி.பி., 8ம் நுாற்றாண்டு ஆகும்.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிற்பத்தை தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுத்து உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும் என அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் 'தவ்வை' அல்லது மூத்த தேவி வழிபாடு தமிழ்நாட்டில் பழமை வாய்ந்த தாய் தெய்வ வழிபாடாகும்.
பல்லவர் காலம் தொடங்கி 13ம் நுாற்றாண்டு வரை இவ்வழிபாடு தமிழ்நாட்டில் தொடர்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நன்னாடு உள்ளிட்ட பல இடங்களில் பல்லவர் கால தவ்வை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சாரம் கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்திலும் ஏற்கனவே ஒரு தவ்வை சிற்பம் இடம் பெற்றிருக்கிறது.
இவ்வாறு செங்குட்டுவன் கூறினார். ஆய்வின் போது சாரம் அகஸ்தீஸ்வரர் கோவில் நிர்வாகி தனசேகர் உடனிருந்தார்.