கோவை: தங்க நகைகளில் ஹெச்.யூ.ஐ.டி., எனப்படும் 'ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள்' இன்று(ஏப்.,01) முதல் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் இந்த அடையாளத்தைப் பார்த்து நகை வாங்கும்படி, பி.ஐ.எஸ்., அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம், தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறையை அறிமுகம் செய்துள்ளது. இது ஒவ்வொரு நகைக்கும் பிரத்யேக குறியீட்டைக் கொண்டிருக்கும். இந்த நடைமுறை இன்று முதல் கட்டாயமாகிறது.
பி.ஐ.எஸ்., கோவை முதுநிலை இயக்குனர் கோபிநாத் நிருபர்களிடம் கூறியதாவது: பி.ஐ.எஸ்., லோகோ, நகையின் துாய்மைத் தன்மை ஹால்மார்க் தனித்துவ 6 இலக்க அடையாள எண் ஆகிய மூன்று குறியீடுகளைக் கொண்ட ஹால்மார்க் முத்திரை அனைத்து தங்க நகைகளுக்கும், ஏப்., 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் நகை வாங்கும்போது இதை கட்டாயமாக பார்த்து வாங்கவும். நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும்.
பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும். பி.ஐ.எஸ்., பதிவு பெறாத நகை விற்பனையாளர்கள், ஹெச்.யூ.ஐ.டி. எண்ணுடன் ஹால்மார்க் செய்த நகைகளையோ, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளையோ விற்பனை செய்ய அனுமதி இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்றுமதி நகைகள், 2 கிராமுக்குக் குறைவான நகை, கண்காட்சிக்கான நகைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த முத்திரை பதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கோவையில் எவ்வளவு?
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை பி.எஸ்.ஐ., அலுவலக எல்லையில், மொத்தம் 3,728 விற்பனையாளர்கள் பி.ஐ.எஸ்., பதிவு பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 1,844 பேர் பதிவு பெற்றுள்ளனர்.
கோவை மண்டலத்தில், மொத்தம் 56 ஹால்மார்க் தரச்சான்று வழங்கும் மையங்கள் உள்ளன. கோவையில் மட்டும் 35 மையங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மையமே இல்லை.
நகைக்கான ஆதார்:
ஹெச்.யூ.ஐ.டி., என்பதை நகைக்கான ஆதார் என்றே சொல்லலாம். பி.ஐ.எஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ள, 'பி.ஐ.எஸ்., கேர்' என்ற செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து, அதில், இந்த குறியீட்டை உள்ளிட்டால், நகை எங்கு முதலில் விற்பனை செய்யப்பட்டது, நகையின் எடை, நகையின் துாய்மைத் தன்மை, என்ன வகையான நகை என்பது தெரிந்துவிடும். நகையின் உண்மைத் தன்மையை சரிபார்க்க முடியும்.