திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக, அரிச்சந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து, ஊராட்சி சார்பில், தனியார் இடத்தில் தற்காலிகமாக 4,000 ரூபாய் வாடகைக்கு, துணை சுகாதார நிலையம் செயல்பட வழி வகுக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு மருத்துவமனைக்கு உண்டான போதிய வசதி இல்லாததாலும், பெண்கள், குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழலும் உள்ளது.
அதேபோன்று கர்ப்பிணியர் பரிசோதனை செய்து கொள்ள இட வசதியும் இல்லை. எனவே, சிரமமாக உள்ளது. எனவே, கர்ப்பிணியர் 5 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிலர் தனியார் மருத்துவமனைக்கும் செல்வதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், பழுதடைந்த சுகாதார கட்டடத்தை அகற்றி, புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க, சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.