மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் இங்கு வீற்றுள்ளனர்.
கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1998ல் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய கும்பாபிஷேகம், அதன்பின் நடத்தப்படவில்லை.
இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, கடந்த 2021 இறுதியில் பாலாலயம் நடத்தி, திருப்பணிகள் துவக்கப்பட்டன.
உயர் நீதிமன்ற குழுவின் அறிவுரையின்படி, சுவாமியர் சன்னிதிகள், மஹா மண்டபம் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்கிடையே, பூதத்தாழ்வாருக்கு அவதார உற்சவம் நடத்தக்கோரி, சில மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையில், கும்பாபிஷேகத்திற்கு பிறகே, பூதத்தாழ்வார் உற்சவம் நடத்த இயலும் என, அறநிலையத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
கும்பாபிஷேகம் நடத்துவது எப்போது என நீதிபதி கேள்வியெழுப்பியபோது, மே 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தற்போது, திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், மே மாதமும் துவங்கிஉள்ளது.
இப்பணிகள் நிறைவுபெற, மேலும் சில மாதங்கள் தாமதமாகலாம் என்பதால், கும்பாபிஷேகம் நடத்துவதும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.