வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் இடம் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய விஏஓ., தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு விஏஓ., மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,
தற்போது 2019 அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி என்னிடம் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை விஏஓ., துரை பிருத்விராஜ் தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன்மூலம் நிரூபணமாகிறது.

இவ்வாட்சியில் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும் , மக்கள் பணி செய்வதற்கு நிர்வாகமே தடையாக இருப்பதாலும் பல்வேறு நிர்வாக திறமையுள்ள அதிகாரிகளை இழந்து வருகிறோம். அரசு அதிகாரிகள் என்றும் மனம் தளராது, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகள் பல செய்திட வேண்டுகோள் விடுக்கிறேன்.
விரைவில் அதிமுக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.