மதுராந்தகம்:மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து, 40 தனியார் பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருக்கழுக்குன்றம், செய்யூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், வேடந்தாங்கல், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இப்பேருந்து நிலையத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மதுராந்தகம் நகராட்சி சார்பில், தனியார் பங்களிப்புடன் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.
இதன் மூலம், பேருந்து பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் என, அனைவரும் குடிநீர் பருகி வந்தனர்.
தற்போது, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் செயல்படாமல் உள்ளது.
கோடை காலத்தில், பேருந்து பயணியர் உட்பட பல தரப்பட்ட மக்களும் வணிக வளாகங்களில் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி அருந்தும் நிலை உள்ளது.
எனவே, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.