திருத்தணி: திருத்தணி அடுத்த, மேல்திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று, காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்ஜுனன் தபசு நடந்தது.
இதில், அர்ஜுனன், பனை மரத்தில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டு வீதம் பாடி ஏறி உச்சிக்கு சென்றார். அங்கு சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார்.
அப்போது பனை மரத்தின் கீழ், பெண்கள் வணங்கி பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும், சில பெண்கள் குழந்தை வரம் வேண்டி தரையில் படுத்து தியானம் செய்தனர்.
இம்மாதம், 13ம் தேதி கர்ண மோட்சம், 14ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம், பின் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிநடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. வரும் 15ம் தேதி, தர்மர் பட்டாபிஷேகத்துடன் இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நிறைவு பெறுகிறது.