உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, 61; விவசாயி. இவரது மகன்கள் கமலக்கண்ணன், 41; இளையராஜா, 37; கமலக்கண்ணனுக்கு திருமணம் முடிந்து விட்டது. இளையராஜாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தந்தை ஏழுமலையிடம், கடந்த 2019ம் ஆண்டு இளையராஜா தகராறு செய்தார். இதில் கோபமடைந்த இளையராஜா தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து இளையராஜாவை கைது செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது..
இந்நிலையில், இளையராஜா பொதுவாக உள்ள 8 ஏக்கர் விவசாய நிலத்தை, பிரித்துக் கொடுக்கும்படி அண்ணனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
அண்ணன், தம்பிக்குள், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், இளையராஜாவை காலால் எட்டி உதைத்தார்.
இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த இளையராஜாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.