ஹாசன்-ஓடும் பஸ்சில் பிரசவ வலியால் துடித்த, கர்ப்பிணிக்கு, பெண் கண்டக்டர் பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது.
பெங்களூரில் இருந்து சிக்கமகளூருக்கு நேற்று மதியம் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்றது. அந்த பஸ்சில் நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்தார்.
ஹாசன் அருகே உதயபுரா பகுதியில் பஸ் சென்ற போது, கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்பகுதியில் மருத்துவமனை எதுவும் கிடையாது.
இதனால் பஸ்சை நிறுத்த சொல்லிய பெண் கண்டக்டர் வசந்தம்மா, ஆண் பயணியரை பஸ்சில் இருந்து கீழே இறங்க சொன்னார். பின்னர் பெண் பயணியர் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் ஆம்புலன்சில் தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரசவித்த பெண் பொருளாதார ரீதியாக நலிவற்ற நிலையில் இருந்தது தெரிந்ததால், சில பயணியரிடம் இருந்து 1,500 ரூபாயை, கண்டக்டர் வசந்தம்மா வாங்கி கொடுத்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர். வசந்தம்மாவின் செயலை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் சத்தியவதி பாராட்டினார்.