சென்னை,தி.நகர் பேருந்து நிலையத்தில், தினமும் 2,000 முறை வந்து செல்லும் பேருந்துகளால், கடும் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்படுவதும் தொடர்கிறது.
சென்னையின் முக்கிய வணிக மையமான தி.நகரில், 35 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு, தனிப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
தற்போது, மாநகரப் பகுதிகளை இணைக்கும் வகையில் இங்கிருந்து கோயம்பேடு, மயிலாப்பூர், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பிராட்வே, கோவளம், போரூர், பூந்தமல்லி உட்பட பல்வேறு வழித்தடங்களில், 480க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அவதி
தேவைக்கு ஏற்றபடி, கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாட்களில் அதிகபட்சமாக, 2,000 சர்வீஸ்கள் வரையில் அதிகரித்து இயக்கப்படுகின்றன.
தி.நகருக்கு வந்து செல்லும் பேருந்து சேவைகள் அதிகரிப்பால், தி.நகர் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அண்ணசாலையில், சைதாப்பேட்டை துவங்கி தேனாம்பேட்டை வரை நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு, தி.நகரில் இருந்து வரும் வாகனங்களும் முக்கிய காரணமாக உள்ளன. சி.ஐ.டி., நகர் பகுதிக்கு பேருந்துகள் திரும்பும் போது, சைதாப்பேட்டையில் கடும் நெரிசல் உருவாகிறது.
கிண்டியில் இருந்து தேனாம்பேட்டை வரை, ஏராளமான சிக்னல்களில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் நிலை நீடிக்கிறது. அதே போல, அசோக்நகர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பகுதிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
தி.நகர் பேருந்து நிலையத்திற்கு, பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் காத்திருக்கும் இடங்கள், இருக்கை, கழிப்பறை, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.
'டெண்டர்'
இது குறித்து பயணியர் கூறியதாவது:
சென்னையின் முக்கிய வணிக பகுதியான தி.நகருக்கு துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் வாங்க, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. பேருந்து நிலையமும் குறுகிய இடத்தில் இருப்பதால், கடும் இடநெருக்கடி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசின் புதிய கொள்கைப்படி, பெரிய பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வடபழநி, வியாசர்பாடி, திருவான்மியூர் பேருந்து நிலையங்களை மேம்படுத்த, 'டெண்டர்' வெளியிட்டு, நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட பட்டியலில் தி.நகர், கே.கே.நகர், தாம்பரம் பகுதிகள் இடம்பெறும். எனவே, வணிக வளாகத்துடன், நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மாம்பலம் ரயில் நிலையம் முக்கியமானதாக உள்ளது. அருகே உள்ள தி.நகருக்கு, துணிகள், நகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க அதிகமானோர் வருவதால், கூட்டம் அலைமோதும்.ஆனால், மாம்பலம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் 'எஸ்கலேட்டர்' எனப்படும் நகரும் மின் படிக்கட்டு மற்றும் மின் துாக்கி வசதி இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.எனவே, இங்குள்ள நான்கு நடைமேடைகளிலும், 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ், பயணியர் வருகை அதிகமுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகிறோம். இந்த வகையில், மாம்பலம் ரயில் நிலையத்தை, 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த உள்ளோம். பணியை விரைவில் துவங்க உள்ளோம்' என்றனர்.