விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் பயில மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான போட்டிகள் வரும் 24ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு விடுதி விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வலைகோல் பந்து, நீச்சல், டேக்வாண்டா, கையுந்து பந்து, கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, வெயிட் லிப்ட் மற்றும் மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, நீச்சல், வெயிட் லிப்ட், மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் இந்தாண்டு சேர 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு தேர்வுகள் வரும் 24ம் தேதி காலை 7:00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் www.sdat.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி 23ம் தேதி மாலை 5:00 ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு போட்டிகளில் பங்கேற்க 24ம் தேதி வரும் மாணவர்கள், விண்ணப்பம், ஆதார் அட்டை, சான்றிதழ் படிவங்கள் கொண்டு வர வேண்டும்.
இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (74017 03485, 86757 73551, 63817 99370 )தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.