- நமது நிருபர் குழு - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர். அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
இவர், அமைச்சராக இருந்தபோது, 2016, ஏப்., 1 முதல், 2021 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், தன் பெயரிலும், மனைவி ரம்யா மற்றும் குடும்பத்தினர் பெயரிலும், வருமானத்திற்கு அதிகமாக 27.23 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, விஜபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மாநிலம் முழுதும், 56 இடங்களில், விஜயபாஸ்கர் மற்றும் குடும்பத்தாருக்கு சொந்தமான அலுவலகம், வீடு, கல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கின.
போலீசாரின் தொடர் விசாரணையில், விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும்; 'ராசி புளூ மெட்டல்ஸ், வி இன்ப்ராஸ்ட்ரக்சர், ராசி என்டர்பிரைசஸ்' ஆகிய நிறுவனங்கள் பெயர்களிலும், பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி குவித்தது தெரியவந்தது.
மேலும், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், இயந்திர தளவாடங்கள், வாகனங்கள் மற்றும் ஆபரணங்களில் முதலீடு செய்து, வருமானத்திற்கு அதிகமாக, 35.80 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்திய போலீசார், சொத்து குவிப்பு தொடர்பான ஆவணங்களை திரட்டினர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சபாநாயகரிடம் முறைப்படி அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது, புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று, 210 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில், சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டை அலுவலகம், 70 லாரிகள், நான்கு கார்கள், 'பொக்லைன்' இயந்திரங்கள், கல் குவாரிகள், அதன் மதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரூ.45.20 கோடி
அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் அன்பழகன். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
இவர், அ.தி.மு.க., ஆட்சியில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 2016 ஏப்., 1 முதல், 2021 மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில், தன் பெயரிலும், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் பெயரிலும் சொத்துக்கள் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மாநிலம் முழுதும், அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், கூட்டாளிகள் வீடு, அலுவலகம் என, 58 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், அன்பழகன் தன் உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணகுமார், நெருங்கிய கூட்டாளிகள் மாணிக்கம், மல்லிகா, தனபால் ஆகியோர் உதவியுடன், மனைவி, மகன்கள் உள்ளிட்டோர் பெயர்களில் நிலம், தொழில், வாகனங்கள், வங்கி இருப்பு, ஆபரணங்களில் முறைகேடாக முதலீடு செய்துள்ளது தெரியவந்தது.
அதேபோல, ஊழல் வாயிலாக கிடைத்த பணத்தை, அன்பழகன் தனக்கு சொந்தமான சரஸ்வதி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
வருமானத்திற்கு அதிகமாக, 45.20 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்ததாக போலீசார் குற்றம் சாட்டினர்.இவர் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சபாநாயகரிடம் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, தர்மபுரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அன்பழகன் உள்ளிட்ட, 10 பேர் மீது, 150 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர். இதனால், விஜயபாஸ்கர், அன்பழகன் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.