உத்தர கன்னடா : கடலில் பலத்த காற்றினால் உத்தர கன்னடா, உடுப்பி என இரு வெவ்வேறு சம்பவங்களில், மூழ்கிய படகில் இருந்து 19 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலாவின் சந்திரவதி சுபாஜ் கர்வி என்பவருக்கு சொந்தமான படகில், 12 மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று முன்தினம் சென்றனர். கடலில் பலத்த காற்றும், மழையும் பெய்ததால், பெரியளவில் அலைகள் எழுந்தன.
பெலம்பர் கிராமம் அருகில் வந்த போது, படகு சேதமடைந்தது. இதனால், படகினுள் தண்ணீர் புகுந்தது. இதை பார்த்த மீனவர்கள், அருகில் உள்ள 'ஜெய்ஸ்ரீராம்' என்ற படகில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக வந்து 12 மீனவர்களையும் காப்பாற்றினர். 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக படகு உரிமையாளர் தெரிவித்தார்.
l உடுப்பியை சேர்ந்த ரஹில் என்பவருக்கு சொந்தமான படகு, மே 21ம் தேதி இரவு மல்பேயில் இருந்து ஆழ்கடலுக்கு ஏழு மீனவர்களுடன் மீன் பிடிக்க சென்றது.
பட்கல் அருகே வந்த போது, பலத்த காற்றினால், கட்டுப்பாட்டை இழந்த படகு, பாறையில் மோதியது. இதனால் படகினுள் தண்ணீர் புகுந்தது. அருகில் இருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட படகை மீட்க முயற்சித்தனர். ஆனால், கயிறு அறுந்து, கடலில் மூழ்கியது.
இதில் இருந்து ஏழு மீனவர்களும் மீட்கப்பட்டனர். 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.