இன்று தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான கவுண்டமணியின் 84 ஆவது பிறந்தநாள். இதனை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவரும் நிலையில் அதிக மீடியா வெளிச்சம் இன்றி வாழ்ந்துவரும் கவுண்டமணி குறித்த சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?
சிறுவயது முதலே படிப்பில் ஆர்வமின்றி நாடகங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்ரமணி கருப்பையா.
கூச்ச சுபாவம் கொண்டவராக விளங்கிய அவர் சிறுவயதில் யாரிடமும் அதிகம் பேசமாட்டாராம்.
தனது 15 ஆவது வயதில் பாய்ஸ் நாடக்குழுவில் இணைந்து நாடக மேடைகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார்.
நாடகங்கள் பலவற்றில் எதிராளிக்கு தனது கவுன்ட்டர் டயலாக் மூலமாக பதிலடி கொடுப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். இதனால் 'கவுன்ட்டர்' மணி என இவர் நாடக உலகில் அழைக்கப்பட்டார்.
நாற்பது வயதுவரை சினிமாவில் சிறு வேடங்களில் நடித்துவந்த அவர், வறுமையாக துன்புற்றார்.
இயக்குநர் பாரதிராஜா, தனது 16 வயதினிலே படத்தில் ரஜினியின் எடுபிடி கதாபாத்திரமாக இவரை நடிக்கவைக்க, அன்றிலிருந்து அவரது சினிமா வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது.
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் பாக்யராஜ், கவுண்டமணி என தவறுதலாக டைட்டில் கார்டில் இவர் பெயரை எழுதிக்கொடுக்க, அந்தப் பெயர் பின்னாட்களில் அவரது சினிமா பெயராக மாறியது.
உலக சினிமாக்கள் பலவற்றை விரும்பிப் பார்ப்பவர் கவுண்டமணி.
![]()
|
இளமைக் காலத்தில் ஹோட்டல் உணவுகளை ஒரு பிடிபிடிக்கும் வழக்கம் கொண்ட கவுண்டமணி, 60 வயதுக்குப் பின்னர் டயட் விஷயத்தில் கவனமாக இருக்கத் தொடங்கினார். உடற்பயிற்சியில் அவ்வளவாக ஆர்வமில்லை.
இதுவரை 700 படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, தனது ஆதர்ச ஜோடியான செந்திலுடன் இணைந்து 450 படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரமேற்று நடித்துள்ளார்.
நகைச்சுவை பிரபலம் சார்லி சாப்ளினுக்கே பட்டப்பெயர் இல்லாத நிலையில் நாம் என்ன பெரிதாக சாதித்துவிட்டோம், நமக்கு எதற்கு பட்டப்பெயர். 'சினிமாவில் மார்க்கெட் இருக்கும்வரையே ரசிகர்கள், அதற்குப் பிறகு..?' என தைரியமாகக் கூறியவர் கவுண்டமணி.
இயல்பாகவே அவர் கம்யூனிஸ சிந்தனை கொண்டவரென்பதால், தனது நகைச்சுவைக் காட்சிகளில் அவ்வப்போது கம்யூனிஸ சித்தாந்தங்களைப் புகுத்திவந்துள்ளார்.
தனது குடும்பம் குறித்தோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ ஊடகங்களுக்குத் தெரியக்கூடாது என நினைப்பவர் கவுண்டமணி. இதனால் அவர் கடந்த 45 வருடங்களில் அளித்த ஊடகப் பேட்டிகள் மிகக்குறைவு.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து படிப்படியாக ஓய்வுபெற்ற கவுண்டமணி, அவ்வப்போது சினிமா விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு வரகிறார்.
ஆடம்பர கைகடிகாரங்கள், சன் கூலர்கள் கலெக்ட் செய்வதில் ஆர்வம் அதிகம். இதனாலேயே விதவிதமான கூலர்களில் இவர் படங்களில் வலம்வருவார்.
கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கருப்பு. கருப்பு ஆங்கிலேயர்களின் ஸ்டைலிஷ் நிறம் எனக் கூறுவார்.
பழம்பெறும் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் கவுண்டமணியின் சினிமா ரோல் மாடலாவார்.
சினிமாவில் குறைந்த நட்பு வட்டமே கொண்டவர் கவுண்டமணி. தனிமையை விரும்புபவர்.
ஞானி ஓஷோவின் கருத்துகள் அவரை அதிகம் ஈர்த்ததால் ஓஷோ எழுதிய நூல்கள் பலவற்றை விரும்பிப் படிப்பாராம்.