வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
![]()
|
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின், ஆவின் கூட்டுறவு நிறுவனத்தால் நாள்தோறும் 4.50 லட்சம் உறுப்பினர்களிடம், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுதும் லாபகரமான மற்றும் சீரான விலை உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், குஜராத்தின் 'அமுல்' பால் கூட்டுறவு நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் வாயிலாக, பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பால் உற்பத்தி பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவு சங்கங்கள் செழிக்க, பால் கொள்முதலை அனுமதிப்பது, வழக்கமாக இருந்து வருகிறது.
அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், வெண்மை புரட்சி கொள்கைக்கு எதிராக உள்ளது. நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், இது நுகர்வோருக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடுகள், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
![]()
|
பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து, விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் இடையே, ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும்.
இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'அமுல் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, பால் கொள்முதல் விலையை, ஆவின் உயர்த்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:குஜராத் அரசின் பொதுத் துறை பால் நிறுவனமான அமுல், காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, அதற்காக சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறது. ஆவினை விட அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்கிறது.சென்னைக்கு மிக அருகில் உள்ள, ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கும் பணிகளை, அமுல் மேற்கொண்டு வருகிறது. வேலுார், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பால் கொள்முதல் செய்ய, அமுல் திட்டமிட்டுள்ளது. இதனால், ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும். அமுல் நிறுவனத்திடம், ஆவின் ஒருபோதும் வீழ்ந்து விடக் கூடாது.எனவே, பால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு 42 ரூபாய், எருமை பாலுக்கு 51 ரூபாய் என, ஆவின் உயர்த்த வேண்டும். அப்போது தான் ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.