வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால், ரஷ்ய வங்கியில் முடங்கிஉள்ள, 2,500 கோடி ரூபாயை எடுக்க முடியாமல், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சிக்கி தவிக்கின்றன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய இந்த போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் போரால், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள சில எண்ணெய் நிறுவனங்களில், நம் நாட்டைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், 46 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இதற்கான ஈவுத் தொகையை பெற்று வந்தன. கடந்த பிப்., மாதம் வரையிலான இந்தத் தொகையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுவிட்டன.

ஆனால், போர் துவங்கியப் பின் கிடைத்துள்ள ஈவுத் தொகைகள், அங்குள்ள வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார தடையால், 2,500 கோடி ரூபாயை எடுக்க முடியாமல், நம் எண்ணெய் நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதனால், ஆயில் இந்தியாநிறுவனம், இந்தியன் ஆயில் வாரியம், பாரத் பெட்ரோ ரிசோசர்ஸ் நிறுவனம், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகையை எடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.