நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
தாட்கோ மூலம், 2022-23ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல்., நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்சி., கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ., பி.பி.ஏ.,) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ் பிலானி கல்லுாரியில் பி.எஸ்சி., கப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் பி.சி.ஏ., பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலை கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம்., பல்கலை கழகத்தில் இன்டகரேட்டட் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படும்.
பிளஸ் 2வில், 2022ம் ஆண்டுகளில் முடித்தவர்கள், 60 சதவீதம், 2023ம் ஆண்டுகளில் முடித்தவர்கள், 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல்., மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். நுழைவு தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். படிப்பிற்கான செலவு தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியில் சேர தாட்கோ வெப்சைட்டான தாட்கோ.காம் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்,