பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் லுங்கிகளுக்கு, ஒரு ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படும் என, உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு லுங்கி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று பள்ளிபாளையத்தில் வட்டார லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது:
விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகரிப்பு, பராமரிப்பு செலவு, மின் கட்டணம், இதர செலவுகளால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. புதிய கூலி உயர்வால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும். இதை சமாளிக்க வேறு வழியின்றி உற்பத்தி செய்யும் லுங்கிகளுக்கு, ஒரு மீட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்த வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ஆனால், தற்போது சூழ்நிலையை பொறுத்து, ஒரு ரூபாய் மட்டும் உயர்த்த சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.