வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:''எதிர்க்கட்சிகள் சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவது வருத்தம் அளிக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![]()
|
அவரின் மற்றொரு அறிக்கை:
பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் கோவிலான புதிய பார்லிமென்டை நம் தேசத்திற்கு அர்ப்பணித்து உள்ளார். அதிகார பரிமாற்றத்தை குறிக்கும் செங்கோல், 1947ல் திருவாசகம் பாடல்கள் பாடப்பட்ட விழாவில், நேருவிடம் திருவாடுதுறை ஆதீனத்தால் ஒப்படைக்கப்பட்டது.
'வாக்கிங் ஸ்டிக்காக' துாக்கி எறியப்பட்ட அந்த செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்தை பெற்ற பின், பிரதமர் மோடியால், சரியான இடத்திற்கு மீட்டெடுக்கப்பட்டது.
ஆங்கிலேயே கிழக்கிந்திய நிறுவனம், நம் நாட்டின் நாகரிக நெறிமுறைகளை அழிப்பதில் முனைந்திருந்த போது, சைவ ஆதீனங்கள் தமிழ் கையெழுத்து பிரதிகளை, குறிப்பாக சங்க காலத்தில் இருந்து சேமித்து பாதுகாப்பதில் பெருமளவில் பங்களித்தன.ஆதீனங்கள் இன்று வரை தமிழகம் முழுதும் உள்ள கோவில்களை நிர்வகிப்பதிலும், குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குவதிலும், குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர்.
சைவ ஆதீனங்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் அல்ல. புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் பங்கேற்ற, சைவ ஆதீனங்கள் சைவ வேளாளர், கற்காத்த வேளாளர், தொண்டை மண்டல சைவ வேளாளர், கொங்கு வேளாளர், பண்டாரம், நகரத்தார், ஆதி சைவர், அகமுடையார் ரத்தினகரர் என, அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இந்த சமூகங்களில் சில, ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவை.
எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தகுதியான எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதும், தமிழகத்தின் அமைப்பை புரிந்து கொள்ளாமல், சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவதும் வருத்தம் அளிக்கிறது. வடக்கே ராஜ தாண்டம் அல்லது தெற்கில் செங்கோல்; இரண்டுமே நீதியை குறிக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
![]()
|
'நோபல் பிரிக்ஸ்' நிறுவனத்துடன் உதயநிதிக்கு தொடர்பு என்ன?
'நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:'தி.மு.க., பைல்ஸ்' வெளியிட்ட போது, நோபல் ஸ்டீல் நிறுவனத்தின், 1,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பி இருந்தோம். முறைகேடான முதலீடு என்ற குற்றச்சாட்டிற்கு பதிலும் வரவில்லை. முறைகேடான பண பரிவர்த்தனை மேற்கொண்ட, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த, அதே முகவரியில், அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன; இதற்காவது பதில் வருமா?இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.