திருப்பூர்: வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் நோக்குடன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு, கடந்த, 10 நாட்களாக, பல்வேறு நாடுகளுக்கு பயணமானது. இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேலும் பங்கேற்றார்.
பிரான்ஸ் உச்சி மாநாடு, இந்தியா - இத்தாலி வர்த்தக கலந்துரையாடல், ஐரோப்பா மற்றும் இந்தோ - பசிபிக் அமர்வு, இந்தியா - இத்தாலி தலைமை நிர்வாகிகள் கலந்துரையாடல், கனடாவில் நடந்த வரியில்லா வர்த்தக ஒப்பந்த ஆலோசனை, நியூயார்க்கில் நடந்த வட்டமேஜை மாநாடு, தென்கிழக்கு அமெரிக்காவில் நடந்த 'பாஸ்ட்னர்ஸ்' கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இக்குழுவினர், பல்வேறு வர்த்தக கூட்டமைப்பினர் மற்றும் அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
'பியோ' தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்திய தொழில்துறைக்கு, உலகம் முழுவதும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு, உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வளர்ந்து வரும் நிலையில், சவால்களை எதிர்கொள்ள, பல்வேறு நாடுகளும் இந்தியாவுடன் கரம்கோர்க்க முன்வந்துள்ளன.
பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதியில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கிடைத்துள்ளது. வரும், 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவின் ஏற்றுமதி மூன்று மடங்கு உயருமென நம்பிக்கை பிறந்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, எண்ணற்ற உற்பத்தி ஆற்றலை கொண்டுள்ளதாக, வளர்ந்த நாடுகள் பாராட்டியுள்ளன.
இந்தியா -கனடா இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக, சிறப்பு முயற்சி எடுத்துள்ளோம். இந்தியாவின் தரம் மற்றும் சேவை மதிப்பை பாராட்டும் வகையில், சீனாவுக்கான கனடா ஏற்றுமதி ஆர்டர்கள், இந்தியாவை நோக்கி திரும்பும். தொழில்முறை வர்த்தக மேம்பாட்டு பயணம், இந்திய தொழில்துறைக்கு நேர்மறை வளர்ச்சி வாய்ப்புகளை அதிகம் உருவாக்கியுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.