வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அடுத்த தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1,500; விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தரப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
தமிழக பொதுத்தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறியது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற இந்த வாக்குறுதியும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வாக்குறுதியை பின்பற்றி சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. திமுக.,வை போல காங்கிரசும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
இதே பாணியை தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் தனது கட்சி சார்பில் முதல்கட்ட வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அப்போது அவர், இதுவே தனது கடைசி தேர்தல் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

* ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும்.
* ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.20,000 வரை நிதியுதவி வழங்கப்படும்.
* ஆந்திர அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசம்.
* புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.