வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: 'மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை. அமைச்சரை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் தமிழக பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக மதுரை விமான நிலையம் வந்த மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரிமியர் லீக் தொடரில் திராவிட மாடல், குஜராத் மாடலை தோற்கடித்ததாக கூறுகின்றனர்.
அப்படியெனில் தமிழர்களே இல்லாத சென்னை அணி, 3 தமிழர்களை கொண்ட குஜராத் அணியை வீழ்த்தியதற்காக திமுக.,வினர் பெருமை பெற்றுக்கொள்வார்களா? சென்னை அணியை குஜராத்தை சேர்ந்த பா.ஜ.,காரர் ஜடேஜா தான் வெற்றிப்பெற வைத்துள்ளார். அதேதான் 2024ல் நடக்கும் தேர்தலிலும் பா.ஜ.,வினர் தான் வெற்றியை தமிழகத்தில் பெறப்போகிறார்கள்.
மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் தேவை. புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்துவரும் சூழலில் அமைச்சரை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பேச்சுவார்த்தைக்கு வராமல் மல்யத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடரக்கூடாது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா?
நடைபயணம்
ஜூலை 9ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணம் துவக்க உள்ளேன். இதற்காக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பயணம் குறித்த விவரங்களை தெரிவிக்க உள்ளேன். இதில் தேசிய தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். வருமான வரித்துறையினர் மீது திமுக.,வினர் நடத்திய தாக்குதல் அத்துமீறிய செயல். உலகிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா உள்ளது. அதற்கு காரணம் பிரதமர் மோடி. அதனை பயன்படுத்தி தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.