வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டூர் மற்றும் எப்ரஹாம்புரம் கிராமங்களில், 655 ஏக்கரில், 700 கோடி ரூபாய் செலவில் கனரக பொறியியல் தொழில் பூங்காவை டிட்கோ நிறுவனம் உருவாக்க உள்ளது.
இது தொடர்பாக, 2017ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், அப்போது போதிய நிலம் இல்லாதது உட்பட, பல்வேறு சூழல்களால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
![]()
|
தற்போது, நிலம் கையகப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எண்ணுார் துறைமுகம் அருகே, இந்த பூங்கா அமைவதால், கனரக தொழிற்சாலைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். தற்போது, தொழில்துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. சந்தை நிலவரமும் மாறி உள்ளது. எனவே, கனரக தொழிற்சாலைகளின் தற்போதைய சூழல் குறித்து விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளோம்.
அதில், கப்பல் கட்டும் தொழிலுக்கான ஆதரவு தொழில் நிறுவனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த தொழில், மின்சாரம் மற்றும் வாகன உப பொருட்கள் மற்றும் பிற பொறியியல் தொழில் சார்ந்த துறைகள் இடம் பெறலாம். அத்துடன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.