வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கரூர் : தி.மு.க.,வினர் தாக்கி விட்டனர்' என, வருமான வரித்துறை பெண் ஆய்வாளர் கதறும் நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சிரித்துக் கொண்டே, மொபைல் போனில் மூழ்கிய வீடியோ, போட்டோக்கள் பரவி வருகிறது. இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை பெரும் சர்சையான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த, 26ல் வருமான வரித்துறை பெண் ஆய்வாளர் காயத்திரி உள்ளிட்ட நான்கு பேர் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில், தி.மு.க.,வினர் பெண் ஆய்வாளர் காயத்திரி உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம், 'ஐ.டி., கார்டு எங்கே?' எனக்கேட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது, போலீசார் யாரும் சம்பவ இடத்தில் இல்லை.
![]()
|
தனிப்பிரிவு போலீசார் மூலம் தகவலறிந்த, கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், அசோக்குமார் வீட்டிற்கு செல்லாமல், 200 அடி துாரம் தள்ளி ஜீப்பை நிறுத்தி விட்டு, அதில் ஹாயாக அமர்ந்திருந்தார்.
அதை பயன்படுத்தி கொண்ட மேயர் கவிதா உள்ளிட்ட தி.மு.க.,வினர், பெண் ஆய்வாளர் காயத்திரியை, அசோக்குமார் வீட்டில் இருந்து வெளியே விரட்டியடித்தனர்.
பின், காரில் ஏற சென்ற ஆய்வாளர் காயத்திரியை சூழ்ந்து கொண்டு ஏற விடாமல் தடுத்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமாரிடம், பெண் ஆய்வாளர் காயத்திரி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.
இன்ஸ்பெக்டர் விதுன்குமார், ஆய்வாளர் காயத்திரியின் கதறலை கண்டு கொள்ளாமல், மொபைல் போனில், எதையோ சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
இதுதொடர்பான, வீடியோ மற்றும் போட்டோக்கள் வேகமாக பரவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பார்த்த வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் அரசு அதிகாரி என்று தெரிந்தும், இன்ஸ்பெக்டர் நடந்து கொண்ட விதத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.