இஸ்ரேல் நாட்டின் 'டெல் அவிவ்' பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தாவரங்கள் வெளியிடும் ஒலிகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஒலிகள் மனிதர்கள் பேசும் ஒலி அளவிலும், ஒரு சோளப் பொரி, பொரிகின்ற ஒலி அளவில் இருக்கும் என்றாலும் இவற்றின் அதிவெண் மிக அதிகமாக இருப்பதால், மனிதர்களால் கேட்க இயலாது.
தாவரங்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும்போது இந்த ஒலிகள் வெளியிடப்படுகின்றன. வௌவால்கள், எலிகள், பூச்சிகளால் இவ்வொலிகளைக் கேட்க முடியும்.
இந்த ஆய்வு, தக்காளி, புகையிலைத் தாவரங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டது. கூடவே, கோதுமை, சோளம், சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட தாவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சில தாவரங்களில் தண்டு வெட்டப்பட்டது; சிலவற்றுக்கு ஐந்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் ஊற்றப்படவில்லை; சில தாவரங்கள் எவ்வித தொந்தரவும் செய்யப்படவில்லை.
ஒவ்வொரு தாவரத்தில் இருந்தும் 10 செ.மீ., தொலைவில் 20 - 250 கிலோ ஹெர்ட்ஸ் ஒலியை உணரக்கூடிய 'மைக்கு'கள் வைக்கப்பட்டு, ஒலிகள் பதிவு செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் ஒவ்வொரு தாவரமும், அதற்கு ஏற்படுத்தப்பட்ட இன்னலைப் பொறுத்து, வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்பின.
இந்த ஆய்விலிருந்து தாவரங்கள் வெளியிடும் ஒலிகளைப் பதிவு செய்வதன் வாயிலாக, அவற்றுக்கு ஏற்படும் துன்பங்களை உணர்ந்து, அவற்றைச் சரி செய்யமுடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.