ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மாதம் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ராஜஸ்தானில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

200 சட்டசபை தொகுதிகளை ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் கடந்த 5 ஆண்டுகளாகவே ராஜஸ்தானில் சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போதும் டில்லி மேலிடத்தின் ஆதரவுடன் அசோக் கெலாட் நிலைமைகளை சமாளித்து ஆட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு கை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினால், ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக,மாநிலத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

200 யூனிட் வரையிலான மின்சாரம் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.