ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கடலோரக் காவல்படை படகில் ரோந்து சென்றனர். மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா பகுதி மணலி தீவு அருகே ரோந்து படகை பார்த்ததும் பதிவு எண் இல்லாத பைபர் படகில் இருந்த 3 பேர் படகை நிறுத்தாமல் சென்றனர். அவர்களை கடலோரக் காவல்படையினர் கடலிலேயே விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகள் கொண்ட பார்சல்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 8 பேர், முத்து எடுக்கும் தொழிலாளர்கள் 5 பேர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் இருந்த பார்சலை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மொத்தம், ரூ.20 கோடி மதிப்பிலான 32.68 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டதாக, கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.