பிரிட்டன் உயிரியலாளர் மற்றும் எழுத்தாளர் ரிச்சர்ட் டாவ்கின்ஸுக்கு டிவிட்டர் சமூக வலைதளத்தில் 30 லட்சம் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இவர் இந்தியாவில் பள்ளிப் பாடத்தில் இருந்து தனிம வரிசை அட்டவணை மற்றும் பரிணாமவியல் ஆகிய பாடங்களை மத நோக்கங்களுக்காக நீக்கியிருப்பதாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதனை முன் வைத்து விவாதம் கிளம்பியுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான என்.சி.ஆர்.டி., பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திலிருந்து தனிம அட்டவணை நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அரசியல், ஜனநாயகத்திற்கு உள்ள சவால்கள் போன்ற பாடப் பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. இது கடும் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னதாக இந்தாண்டு டார்வினின் பரிணாமக் கோட்பாடும் உயர் நிலைப் பாடத்திலிருந்து நீக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை விமர்சிக்கின்றனர். பா.ஜ.க., தனது அரசியல் கொள்கையை பாடத்திட்டத்தில் புகுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
![]()
|
என்.சி.ஆர்.டி., மற்றும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் இது பற்றி கூறுகையில், “கோவிட் தொற்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில பாடங்கள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்கள் 11 மற்றும் 12 வகுப்பில் அறிவியல் குரூப் எடுத்தால் அதில் தனிம வரிசை அட்டவணை மற்றும் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு ஆகியவற்றைப் படிப்பார்கள். எனவே பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்.” என கூறியுள்ளார்.
![]()
|
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.,வை குறிப்பிட்டு பிரிட்டன் உயிரியலாளர் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் ஒரு பதிவிட்டிருந்தார். மத காரணங்களுக்காக மேற்கூறிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள கேபிடல் மைண்ட் சி.இ.ஓ., தீபக் ஷெனாய், “பாடங்கள் நீக்கப்படவில்லை. அவை வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளன. பரிணாமவியல் 12ம் வகுப்பிலும், தனிம வரிசை அட்டவணை 11ம் வகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இது மத ரீதியான நடவடிக்கை இல்லை.” என விளக்கியுள்ளார்.