சென்னை:'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கார் மீது கல் எறிந்து, நுாதன முறையில் கொள்ளை முயற்சி நடப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடந்த, 28ம் தேதி இரவு, 11:00 மணியளவில், செங்குறிச்சி டோல்கேட் அருகே, டவேரா காரில் குடும்பத்துடன் சென்றவர்கள் மீது, கனரக வாகனத்தின் ஸ்டெப்னி டயர் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில், காரின் முன் பக்க கதவு சேதமடைந்தது.
அதேபோல், அன்று இரவு, 10:45 மணியளவில், மற்றொரு காரில் சென்ற நபரின், கார் கண்ணாடி கல்பட்டு சேதமடைந்தது. அவசர போலீசை தொடர்பு கொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லை என, அந்த நபர், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து, கள்ளக்குறிச்சி எஸ்.பி., தலைமையிலான போலீசார், செங்குறிச்சி டோல்கேட் அருகே விசாரணை செய்தனர்.
அப்போது, அந்த பகுதியில் இருந்து, 100க்கு தொடர்பு கொள்வதில் சிரமம் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் குற்றம் செய்யும் நோக்கத்தில் செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனினும், தீவிர விசாரணை நடந்து வருகிறது.
செங்குறிச்சி டோல்கேட் அருகே, காரில் செல்லும் நபர்களை நோக்கி, கல் எறிந்து நுாதன முறையில் கொள்ளையடிக்க முயற்சி நடக்கிறது என, தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மை இல்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.