வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், டிஇடி தேர்வில் தகுதி பெறவில்லை எனக்கூறி, அவர்களின் வருடாந்திர சம்பள உயர்வை நிறுத்தி வைத்து பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தும் தகுதி பெறாத ஆசிரியர்கள் சம்பள உயர்வு பெற தேவையில்லை. அவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கடந்த 2011ம் ஆண்டிற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்.
சம்பள உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை. பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம். நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதி ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.