புவனேஸ்வர்: மீட்பு பணிகள் முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
ரயில் விபத்தை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மம்தா, விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, அவர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மம்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரயில்வே இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்குகிறது. எங்கள் மாநில மக்கள் உயிரிழந்தால் தலா ரூ.5 லட்சம் வழங்குவோம். மீட்பு பணிகள் முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். நேற்று 40, இன்று 70 என மொத்தம் 110 ஆம்புலன்ஸ்களை அனுப்பி உள்ளோம். எங்கள் மாநில மருத்துவர்கள் 40 பேர் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோரமண்டல ரயில் சிறந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்றாகும். நான் மூன்று முறை ரயில்வே அமைச்சராக இருந்தேன். நான் பார்த்ததில் இது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து. இது போன்ற வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் ரயிலில் மோதலை தடுக்கும் கருவி எதுவும் பொறுத்தப்பட வில்லை. அந்த கருவி ரயிலில் இருந்திருந்தால், இப்படி கொடூரமான முறையில் விபத்து நடந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.