ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் பழுதால் ஆறு மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூண்கள், இரும்பு பிளேட்டுகள் பலவீனமாகி 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.

இந்நிலையில் ரூ. 525 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடந்து வரும் சூழலில் கடந்த 6 மாதமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இன்றி சென்னை, கோவை, திருப்பதி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மதுரை, திருச்சியில் இருந்து வரும் பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.
இங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்களில் பெரும் சிரமத்துடன் ராமேஸ்வரம் வந்திறங்குகின்றனர். எனவே புதிய ரயில் பாலம் கட்டுமான பணியை முடித்து இந்தாண்டு இறுதிக்குள் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.