கோல்கட்டா: ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு மம்தா அளித்த பேட்டி: ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. ரயில் விபத்தில் காயமுற்றவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த 103 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். ரயில் பயணம் செய்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த 31பேர் காணவில்லை.

ரயில் விபத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உண்மையை மறைக்கக் கூடாது. மக்களுக்காக உழைக்க வேண்டும். நாங்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளேன்.
ரயிலில் பயணம் செய்து மன உளைச்சலுக்கு ஆளான சுமார் 900 பேருக்கு 10ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ரயில் விபத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இவ்வாறு மம்தா கூறினார்.