கம்பம், -விதையில்லா திராட்சை வரத்து இல்லாததால் கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் பன்னீர் திராட்சை விலை உயர்ந்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சை இங்கு சாகுபடி செய்யவில்லை. விதையில்லா திராட்சை மஹாராஷ்டிராவில் மட்டுமே சாகுபடியாகிறது.
மஹாராஷ்டிராவில் இருந்து விதையில்லா திராட்சை டிசம்பர் கடைசியில் வரத்து துவங்கி ஏப்ரல், மே வரை நீடிக்கும். இது தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும். விதையில்லா திராட்சை வரத்து காலங்களில், கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்காது. விதையில்லா திராட்சை வரத்து குறைந்தவுடன் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்க துவங்கும்.
தற்போது சில வாரங்களாக விதையில்லா திராட்சை வரத்து குறைந்துள்ளது. எனவே தற்போது கம்பம் பகுதி பன்னீர் திராட்சைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கிலோ ரூ.55 முதல் 60 வரை கிடைக்கிறது.
இது தொடர்பாக திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், விதையில்லா திராட்சை வரத்து நின்று போனது. எனவே, பன்னீர் திராட்சை விலை உயர்ந்து வருகிறது. இது வழக்கமானது தான். இந்தாண்டு மழை, வெயில் அதிகமாக இருந்ததால் மகசூல் பாதிப்பு உள்ளது. எனவே விலை இன்னமும் உயர வாய்ப்புள்ளது என்றார்.