வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துள்ளார். இதற்காக தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர் கடந்த மே 29ம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமிழரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி, அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், 'தர்மன் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் மிகப்பெரிய இழப்பு' என்றார். இவர் துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் பொருளியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்ற அவர் பிரதமருக்கு பொருளியல் கொள்கைகள் குறித்து ஆலோசனையும் தருகிறார்.