வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில் அடுத்த மாதம் முதல், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. அதேநேரத்தில், வீடுகளுக்கு கட்டண உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவுப்படி, அடுத்த மாதம் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போது 1 யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதிலிருந்து 4.70 சதவீதம் அளவுக்கு உயர்த்த, வாரியம் திட்டமிட்டிருந்தது. இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில் இம்மாதம் 3ம் தேதி வெளியானது.
இந்நிலையில், அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆட்சியின் திறனற்ற மேலாண்மையால், மின் வாரியத்தின் ஒட்டு மொத்த நிதி நிலைமை மோசமாக பாதிப்படைந்து இருந்தது.
உத்தரவு
மத்திய அரசு, 2021 நவ., 9ம் தேதி வெளியிட்ட ஆணையின்படி, எரிபொருள் மற்றும் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வை ஈடுகட்ட, உடனுக்குடன் நுகர்வோரிடம் இருந்து, அதற்கான கட்டணத்தை வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதன்பின், 2022 டிசம்பரில் பிறப்பித்த உத்தரவில், மின் கட்டணத்தை மாதந்தோறும் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தது. அதனால், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 - 23 முதல், 2026 - 27 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த, 2022 செப்., 9ல் உத்தரவிட்டது.
இதன்படி, 2022 - 23ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள நுகர்வோர் பணவீக்க விகிதம் அல்லது 6 சதவீதம், இதில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தலாம் என ஆணையம் கூறியுள்ளது.
ஆனால், கடந்த ஏப்ரல் மாத நுகர்வோர் பணவீக்க விகிதம், 4.70 சதவீதம் என்ற அளவில் குறைவாக இருந்தது. எனவே, அந்த அளவுக்கு அடுத்த மாதம் முதல், மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால், 'ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார்.
எனவே, கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டது. குறைந்த அளவில் கட்டணத்தை உயர்த்தும் வகையில்,2022 ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக, ஆகஸ்ட் மாத நுகர்வோர் பணவீக்க விகிதம் கணக்கில் எடுக்கப்பட்டது.
சலுகை
அதன்படி, கட்டண உயர்வின் அளவு, 4.70 சதவீதத்தில் இருந்து, 2.18 சதவீதமாக குறைக்கப்பட்டது.இந்த குறைந்த உயர்வில் இருந்து, பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில், வீடுகளுக்கு ஏற்படும், 2.18 சதவீத கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுள்ளது. அதற்கான செலவை, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவால், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.
வேளாண், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றிற்கு வழங்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டிற்கு, 13 காசு முதல், 21 காசு வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
பிற மாநிலங்களில், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இணைப்புகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் யூனிட், 62 காசு; கர்நாடகாவில் 70 காசு; ஹரியானாவில் 72 காசு; மத்திய பிரதேசத்தில் 33 காசு; பீஹாரில் 1.47 ரூபாய் என, இந்த ஆண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கான மின் கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமின்றி, வணிக மற்றும் தொழில் இணைப்புகளுக்கும் மிகக் குறைந்த அளவில் தான் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.