வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி-''சென்னை பல்கலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். தற்போது இருக்கும் பல்கலைக்கு அவர் பெயர் வைக்கலாமா அல்லது புதிய பல்கலைக்கு வைக்கலாமா என்றும் பரிசீலித்து வருகிறோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
![]()
|
தஞ்சாவூர், திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களில் பாசன பகுதிகளையும், துார் வாரும் பணிகளையும் ஆய்வு செய்த முதல்வர், திருச்சியில் அளித்த பேட்டி:
ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன். பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வரும் முன், அனைத்து இடங்களிலும் துார் வாரும் பணிகள் முடிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளை போல், இந்த ஆண்டும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பர் என, நம்புகிறேன்.
தி.மு.க., ஆட்சியில் வேளாண் உற்பத்தியும், பாசன பரப்பும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் வேளாண் துறையின் மாபெரும் புரட்சியை காட்டுகிறது.
கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்., ஆட்சியாளர் மட்டுமின்றி, ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களும் மேகதாது அணை கட்டுவதாக சொன்ன போதும், நாம் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். அதே நிலைப்பாட்டில் தான் அரசு உள்ளது.
டெல்டாவில் 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால் துார் வாரும் பணிக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணி நடைபெற்று வருகிறது. ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டும் துார் வாரும் பணி மேற்கொள்ளப்படுவதால் விரைவில் பணி முடியும்.
திருச்சி மற்றும் மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழக்கப்பட்ட வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, மறு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால், கவர்னரை மாற்ற வேண்டும் என்ற பிரச்னையே இல்லை.
சென்னை பல்கலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். தற்போது இருக்கும் பல்கலைக்கு வைக்கலாமா அல்லது புதிய பல்கலைக்கு வைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாததற்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியது போல், கவர்னர் தான் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்பதை அழுத்தமாக சொல்வேன்.
இதுபோன்ற இடையூறுகளை தவிர்ப்பதற்காக, பல்கலை வேந்தராக, முதல்வர் இருக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.
![]()
|
ஆவினில் பிரச்னைகள் இருப்பதாக, திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. போலியாக ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன; அதில், உண்மை இல்லை.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, வரும், 23ம் தேதி பீஹாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சுட்டிக்காட்டிய குறைகள் சரி செய்யப்பட்டு, மீண்டும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மின் கட்டண உயர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:மின் கட்டண உயர்வு பற்றி தினமலர் பத்திரிகை மட்டுமே பெரிதுபடுத்தி உள்ளனர். மற்றவர்கள் அதை என்னவென புரிந்து கொண்டுள்ளனர். திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர்.வீட்டு மின் இணைப்பு கட்டணம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்படாது. இலவச மின்சார சலுகைகள் தொடரும்.மத்திய அரசின் விதிமுறைப்படி, 4.7 சதவீதம் கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 சதவீதமாக குறைத்து, அந்த தொகையையும் மானியமாக தமிழக அரசே மின் வாரியத்திற்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும், 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என, தெளிவுபடுத்தி இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் இந்த மின் கட்டணம் அதிகம். அ.தி.மு.க., ஆட்சியில் செங்குத்தாகமின் கட்டணத்தை உயர்த்தி, மின் வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டுச் சென்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்த போது, 'உதய்' திட்டத்தில் அ.தி.மு.க., அரசு கையெழுத்திட்டதால் தான் இந்த கோளாறு.இவ்வாறு அவர் கூறினார்.