வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''இ - சேவை மையங்களில், வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது; நேரடியாக வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படுகிறது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
![]()
|
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வந்தது. தற்போது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஆண்டு முழுதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டோர், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, விரைவு தபாலில் வீட்டிற்கு அனுப்பப்படும்.
இதுவரை அரசு இ - சேவை மையங்களில், வாக்காளர் அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டது; தற்போது அப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டையில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் ஒரே மாதிரியான அட்டை அச்சிடப்படுகிறது.
![]()
|
எனவே, புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், தேர்தல் கமிஷன் நியமித்துள்ள நிறுவனம் சார்பில், வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் தபாலில் வாக்காளர்கள் வீடுகளுக்கு அனுப்புவர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக வினியோகிப்பதும், பல்வேறு புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அட்டையை தொலைத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.