வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: கலவரம் பாதித்த மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கவர்னர் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து உள்ளது. இந்த குழுவில், முதல்வர், அமைச்சர்கள், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தும் இக்குழு, சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைதியை கொண்டு வருவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முதல்வர்கள் ஆலோசனை
முன்னதாக, மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல்வர் பைரன் சிங்கை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா இன்று (ஜூன் 10) நேரில் சந்தித்து பேசினார்.

'மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதி திட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, அம்மாநில அரசு தரப்பில், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற மத்திய அரசு, சி.பி.ஐ., அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
விசாரணையை துவக்கியுள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், இது குறித்து ஆறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 101 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

ஆலோசனை
மணிப்பூர் வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மணிப்பூர் மற்றும் அசாம் மாநில முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கிடேயே, ராணுவத்தினர் வன்முறையை கட்டுப்படுத்த, ரோந்து பணியின் போது அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.