மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பேருந்தில் பயணம் செய்த சேத்துரைச் சேர்ந்த ராஜி என்பவருக்கும் பேருந்து நடத்துனர் மோகன் என்பவருக்கும் சில்லறை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ் தனது குடும்பத்தினருடன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.
பேருந்து கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் சீர்காழி வரும் பொழுது ராஜ் அவரது ஆதரவாளர்களுடன் சேத்தூர் அருகே மண்ணிபள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களுடன் பேருந்து முன்புறம் நிறுத்தி பேருந்தை மறித்து உள்ளே ஏறி நடத்துனர் மோகனை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை கீழே இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து காயமடைந்த நடத்துனர் மோகன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பேருந்து நிர்வாகம் சார்பில் மணல்மேடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது நடத்துனரை பலர் சேர்ந்து தாக்கும் கொடூர தாக்குதல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.