வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், 2019க்கு பின் புதிதாக நிலம் வாங்கியவர்கள் பயன் பெற முடியாது என்பதில் மாற்றம் கொண்டு வர, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை, 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டம், விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை, 13 தவணையாக இத்தொகை விவசாயிகளுக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
திட்டம், 2019ல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின், சில விவசாயிகள், விவசாய நிலம் வாங்கி, சிறிய அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் இத்திட்டத்தில் பயன் பெற முடியாது.
விவசாய நிலம் யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியான விவசாயிகள் தான், இதில் பயன் பெறுகின்றனர்.
திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, 2019க்கு பின், விவசாய நிலம் வாங்கியவர்களுக்கும், உதவித்தொகை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -