கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, வாடிக்கையாளர்களுக்கு புதுமையான முறையில் சாக்லேட்டுகள் வழங்கி ஆச்சர்யப்படுத்த
திட்டமிட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இன்று (செப்.,17) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடும் கடன் வாங்குபவர் வங்கியில் இருந்து நினைவூட்டல் அழைப்பிற்கு பதிலளிக்க மாட்டார் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்களை முன்னறிவிப்பின்றி அவர்களது இல்லங்களில் சந்திப்பதே சிறந்த வழி என தீர்மானித்துள்ளோம். ரெபோ விகிதங்கள் உயர்வால், வட்டி விகிதங்களுடன் கடன்தொகை மற்றும் சில்லறைக் கடன்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ.,யின் சில்லறை கடன், ஜூன் 2023 காலாண்டில் ரூ.10,34,111 கோடியிலிருந்து 16.46 சதவீதம் அதிகரித்து ரூ.12,04,279 கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த கடன் ரூ.33,03,731 கோடியாக, கடந்தாண்டை விட 13.9 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. உண்மையில் எஸ்.பி.ஐ.,யின் சுமார் 16 சதவீதம் என்ற கடன் வளர்ச்சிக்கு, சில்லறை கடன்களே பெரும் பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
வங்கி அதிகாரிகள் கூறுகையில்,
'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இரண்டு பின்டெக் மூலம், சில்லறை கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் திருப்பிச் செலுத்தும் கடமைகளை நினைவூட்ட ஒரு புதிய வழியை சோதனை செய்ய உள்ளோம்.
கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடும் கடன் பெற்றவர், வங்கியின் நினைவூட்டல் அழைப்பிற்கு பதிலளிக்க மாட்டார். எனவே அவர்களை அவர்களது சொந்த வீடுகளில் முன்னறிவிப்பின்றி சந்தித்து தனிப்பட்ட முறையில் சாக்லேட்டுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துவதே சிறந்த வழியாகும்.
இந்த முறைக்கு இதுவரை, வெற்றி விகிதம் அதிகமாக உள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள்,அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை முறையாக இணைத்துவிடுவோம். 4 முதல் 5 மாதங்கள் சோதனை முறையில் இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்'
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எஸ்.பி.ஐ., ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகமான சில்லறை கடன்களில் தனிநபர், வாகனம், வீடு மற்றும் கல்வி கடன்கள் உள்ளன. ஜூன் மாத நிலவரப்படி ரூ.6.3 லட்சம் கோடிக்கு மேல் வீட்டுக் கடனாக அளித்துள்ள எஸ்.பி.ஐ., மிகப்பெரிய அடமான கடன் வழங்கும் வங்கியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.