கோழிக்கோடு 'கேரளாவில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில், நிபா வைரஸ் புதிதாக யாருக்கும் பரவவில்லை' என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, ஆறு பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது; அதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக புதிய பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து, கேரள அரசு பரிசோதனை செய்து வருகிறது.
இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
கடந்த 15ம் தேதி கோழிக்கோடில் உள்ள ஒரு நபருக்கு, நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் வாயிலாக, புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. எனவே, நிபா வைரஸ் இரண்டாம் அலை உருவாகவில்லை என்பதை பரிசோதனைகளின் வாயிலாக விரைவில் உறுதிப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.