இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பார்லிமென்ட் அமைப்பே உயரந்தது. ஜனநாயகத்திற்கு இன்று சிறந்த நாள். அரசு எந்த அமைப்புக்கு எதிரானது அல்ல என பார்லிமென்டில் அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பேசினார். இதன் பின்னர் தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் பிரதமர் கிலானிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. வரும் 19 ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே, மெமோகேட் விவகாரம் என்ற வழக்கு நடந்து வருகிறது. இதற்காக சுப்ரீம் கோர்ட் தனியாக ஒரு குழுவை நியமித்து விசாரணையை நடத்தி வருகிறது. இக்குழுவின் முன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானி தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் இன்று ஆஜராகிறார். மெமோகேட் விவகாரத்தில், பாக்., ராணுவத்தை அடக்கி வைக்கும்படி சர்தாரி, அப்போதைய அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லனுக்கு கடிதம் அனுப்பியது குறித்து ஆதாரபூர்வமான தகவல்களை, மன்சூர் இஜாஸ் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், 2009ல் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட, தேசிய நல்லிணக்க அவசரச் சட்டத்தின் மீது அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. இவ்வழக்கில், ஆறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதில் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும் என்பதும் ஒன்று. இநத வழக்கு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கண்டன நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனவரி 19ம் தேதியன்று நேரில் ஆஜராகும்படி கிலானிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்தாரி மற்றும் 8000 பேர் மீதான வழக்குகளில் 7 பேர் அடங்கிய நீதிபதி பெஞ்ச் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராஜினாமா செய்ய முடிவு: சு்ப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து பிரதமர் யூசுப் ரசா கிலானி, அதிபர் சர்தாரியை சந்தித்து பேசினார். அப்போது அவர் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ளார். பார்லிமென்ட் விரும்பினால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவும் கலானி முடிவு செய்துள்ளதார்.
இந்த இரு வழக்குகளோடு, பார்லிமென்ட்டில், அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பும் இன்று நடந்தது. இந்த தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேறியது. தீர்மானத்தின் போது எதிர்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக பார்லிமென்டில் பிரதமர் கிலானி பேசுகையில், இந்த நாள் பாகிஸ்தான் ஜனநாயகத்திற்க சிறந்த நாள். என்னை பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் தோல்வியடைந்துள்ளன.பாகிஸ்தானில் பார்லிமென்ட் அமைப்பே உயர்ந்தது. நாங்கள் பாகிஸ்தானில் உள்ள எந்த அமைப்புக்கும் எதிரானவர்கள் அல்ல. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறேன். தீர்ப்பை மதித்து வரும் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவேன் என கூறினார்.
. இந்த மூன்று சம்பவங்களும், அதிபர் மற்றும் பிரதமர் இருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வளவு சிக்கல்களுக்கிடையிலும், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.