நியூயார்க்: பிரதமர் என்ற நிலையில் சுதந்திரமாக செயல்பட முடியாத தலைவராக மன்மோகன்சிங் இருப்பதாக ‘டைம் பத்திரிகை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிழல் பிரதமராக இருந்து வருவதாகவும், சாதனை படைக்க முடியாத பிரதமராக இருப்பதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகையின் ஆசியா பதிப்பில் ‘ ஏ மேன்ஆப் ஷாடோ ’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. பணவீக்கம் நாட்டை அச்சுறுத்தி வருகிறது. விலைவாசி உயர்வும் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக உள்ளது. இவற்றினை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்த பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நிழல் பிரதமராக உள்ளார். சுதந்திரமான முடிவினை அவரால் எடுக்கமுடியவில்லை.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரவில்லை. புரையோடிப்போன ஊழல்கள் ,பணவீக்கம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் வெறுத்துப்போன வாக்காளர்கள் அவரது தலைமையிலான அரசு மீது நம்பிக்கையை இழுந்துவிட்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது சக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் எதுவும் நடவடிக்கை எடுக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறார். மத்திய அமைச்சர்களை அவரால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்ற கோஷ்ம் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், டைம் பத்திரிகையின் வெளியிட்டு இந்த கட்டுரை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.