திருச்சூர்:பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேர், திருச்சூரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், கடந்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழக போலீசாரும் உதவி செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக, இதுவரை, 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில், குண்டு வெடிப்பில் தொடர்புஉடையவர்கள் என, நம்பப்படும், கோவையைச் சேர்ந்த, சுல்பிகர் அலி, 22, மற்றும் சபீர், 24, என்ற இருவர், கேரளா, திருச்சூர் மாவட்டம், கெசேரி என்ற இடத்தில், கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் மொபைல் போன் சிக்னல்களை, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். இதன்மூலம், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை, 13 ஆக உயர்ந்து உள்ளது.