கோவை:கோவை
"ஸ்ரீ கருட சேவாஸ்ரம டிரஸ்ட்' சார்பில், 18ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நேற்று
துவங்கியது; நாளை நிறைவடைகிறது.ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை,
அறிவியல் கல்லூரியில், மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டின் துவக்க விழா
நேற்று காலை நடந்தது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகளுக்கு பூரண கும்ப
மரியாதை வழங்கப்பட்டது. கருட மந்திர பாராயணத்துடன் ஜீயர் சுவாமிகள் கருடக்
கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.இதைதொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி,
திருப்பல்லாண்டு பாவை சேவிக்கப்பட்டது. பாலபோகம், மதுரகவியாழ்வார் அருள
செய்த "கன்னிநுண் சிறுதாம்பு' சேவிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளிலிருந்து வந்திருந்த நான்கு குழுக்கள் நாலாயிர திவ்ய பிரபந்த
சேவாகாலம் செய்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கோஷ்டி தீர்த்த பிரசாதம்
வழங்கப்பட்டது.
பொலிந்துநின்ற ஆதிபரான், ஆதிநாதவள்ளி தாயார்,
குருகூர்வள்ளி தாயார், ஆலிலை கண்ணன், லட்சுமிநரசிம்ம பெருமாள்,
யோகநிரசிம்மர் சக்கரத்தாழ்வார், ஆண்டாள் கோதைநாச்சியார், கருடாழ்வார்,
ராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்தனர்.மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சம்பாவனை மற்றும் நினைவுப்
பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது நாளான இன்று விஷ்ணு சகஸ்ரநாமம்,
ததியாராதனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மூன்றாவது நாளான
நாளையுடன் மாநாடு நிறைவடைகிறது.