கட்சியை வளர்க்க இளைஞர்களை இணைத்து, சிறப்பாக பணிபுரியும் இளைஞரை, "கட்சியின் தூண்' என்று தலைமை பாராட்டும். அந்த இளைஞன், கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்களும், தோழர்களும் விரும்புவர். அண்ணாதுரையின் மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேறாமல், தலைமை ஏற்று இருந்தால், வைகோ தி.மு.க.,வின் தலைமை ஏற்று இருந்தால், சில வரலாற்றுப் பிழைகள் நடந்திருக்காது.
கடந்த, 1938ல், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், மீண்டும், 1939ல், தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். காந்திஜிக்கு, இது பிடிக்கவில்லை. எனவே, சுபாஷ் சந்திரபோஸை எதிர்த்து போட்டியிட்ட, பட்டாபி சீதாராமை, காந்திஜி ஆதரித்தார். முடிவில், சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி பெற்றார். "பட்டாபி சீதாராமின் தோல்வி, என் தோல்வி' என்று பேசினார் காந்திஜி.காங்கிரஸ் உறுப்பினர்கள், தனக்கு போதிய ஆதரவு தராத நிலையில், பல எதிர்ப்புக்களுக்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை தொடர மறுத்த சுபாஷ் சந்திரபோஸ், தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சுபாஷ் சந்திர போஸ், 1939ல், தன் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், காந்திஜியின் ஆதரவு, சுபாஷ் சந்திர போஸ்க்கு இருந்து இருக்கும் என்றால், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாதை, வேறுமாதிரியாகத் தான் இருந்து இருக்கும்.கடந்த, 1984ல், லோக்சபா தேர்தலில், இரண்டு இடங்கள் மட்டுமே பெற்ற பா.ஜ.,வை, பின், ஆட்சியில் அமர வைத்த பெருமை, அத்வானியையே சாரும்.மக்களுக்கு தலைவர் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல, மாநில தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்கள் கூட, நரேந்திர மோடி பிரதமரானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். 1939ல், காந்திஜி செய்த தவறை, தற்போது, அத்வானி செய்ய மாட்டார் என்று நம்பலாம்.
பா.ஜ.,வை உருவாக்கியவர்களில் முக்கியமானவர், அத்வானி. அவரையும் மீறி அவர் இல்லாமல், அவர் எதிர்ப்பு தவிர, வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 2002 பிப்., 27ல், கோத்ரா ரயில் எரிப்பில், 57 பேர் பலியானதை தொடர்ந்து, குஜராத்தில் நடைபெற்ற கலவரம், மோடிக்கு கறை ஏற்படுத்தி விட்டது. ஆனால், 1969 மற்றும் 1985ல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை விட அதிகம்.கடந்த, 1984ல், இந்திரா படுகொலை செய்யப்பட்ட போது, சீக்கிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, இன்னும் சரியாக தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், 16 பேர் மீதும் காவல் துறை அதிகாரிகள், 13 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. யார் மீதும், பெரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. "பலம் வாய்ந்த மரம் சாயும் போது, மண்ணையும் சிறிது பெயர்த்து எடுத்துவிடும்' என்று ராஜிவ் கூறியதை, யாரும் பெரிதுப்படுத்தவில்லை.ஆனால், குஜராத் கலவரத்தில், 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பதை, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் லோக்சபாவில் தெரிவித்தார். குஜராத்தில் கலவரத்தை ஒட்டி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான, 126 பேரில், 77 பேர் இந்துக்கள் என்பதை, தேசிய சிறுபான்மை மனித உரிமை தலைவர், ஜான் ஜோசப்
தெரிவித்தார்.
மார்ச் 5, 2002 வரை, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 98 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. 85 முகாம்களில், முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டனர். 13 முகாம்களில், இந்துக்கள் தங்க வைக்கப்பட்டனர். தற்போது குஜராத், கலவரம் இல்லாத மாநிலமாக உள்ளது.குஜராத் கலவரத்தை தொடர்ந்து, நரேந்திர மோடிக்கு, "விசா' வழங்க, அமெரிக்கா மறுத்து விட்டது. ஆனால், இஸ்ரேலுக்காக, எண்ணெய் வளத்திற்காக, பல முஸ்லிம் நாடுகள் மீது, அறிவிக்கப்படாத போரை துவங்கியுள்ளது அமெரிக்கா.லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என்று, பல நாடுகள் மீது கொத்து குண்டுகளை வீசி கொலை செய்கிறது. பிலிப்பைன்ஸ், மியான்மர் இனப் படுகொலைகள், அமெரிக்காவின் கண்ணுக்கு தெரியவில்லை.சிரியாவில் கலகக்காரர்களுக்கு உதவ, தன்னை தயார் செய்து வருகிறது அமெரிக்கா. பல நாடுகளில் மூக்கை நுழைத்து, முஸ்லிம் மக்களை அதிகம் கொல்வது அமெரிக்கா தான். அதை சொல்ல, துணிச்சல் யாருக்கும் இல்லை.முள்ளிவாய்காலில் மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாமில் இருந்து முனகிய சத்தம் கூட, அமெரிக்காவின் காதில் விழவில்லை. ஒரே நாளில், 40 ஆயிரம் பேரை கொன்ற, ராஜபக்ஷேவிற்கு, விசா மறுக்கப்படவில்லை.
கடந்த, 1960ல் உருவாக்கப்பட்ட குஜராத்தில், இதுவரை, 14 முதல்வர்கள் பதவி ஏற்று உள்ளனர். மோடி மட்டும், நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மூன்று முறை தன் தலைமையில் தேர்தலை சந்தித்து உள்ளார். சிறுபான்மை மக்களை திருப்திபடுத்துவதே மத சார்பின்மை என்று, எல்லா அரசியல்வாதிகளும் செயல்படும் போது, மக்களின் நலத்திட்டத்தில் மட்டுமே, மோடி கவனம் செலுத்தி உள்ளார்.
தற்போது, சரியான தலைமை, பா.ஜ.,வுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் தேவை. சோனியாவின் வழி காட்டுதலில், மன்மோகன் தலைமையில், காங்., கட்சியின் ஊழலால், ஊழல் பட்டியலில், உலகில் முதலிடம் இந்தியா வந்து விடும்.ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், "2ஜி' ஊழல், காமன்வெல்த் ஊழல், விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், இந்த ஊழலை மறைக்க, கோப்புகளை காணாமல் போக செய்த ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மருமகனின் ஊழல், எம்.பி., சீட் தர ஊழல் என, பட்டியல் தொடர்கிறது.
ராகுலை, காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றால், தேர்தலில் போட்டியிடும் காங்., உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், எத்தனை கோடி தருவர் என, காங்., தலைமை பேரம் பேசினாலும் பேசலாம். அவ்வாறு அறிவித்தால், ஊழல் அட்சய பாத்திரத்தை சுமந்து நிற்கும் மணிமேகலையின் மகனுக்கு, செங்கம்பள விரிப்பு தர, பல மாநில கட்சிகள் தற்போது தயாராகி வருவது, ஊழலின் உச்சகட்ட சாட்சியாகி உள்ளது."நான், 2001, அக்., 7ல், சி.எம்., ஆகவில்லை. நான் எப்போதும் சி.எம்., தான். சி.எம்., என்றால், "சீப் மினிஸ்டர்' அல்ல; காமன் மேன்' என்று பேட்டி ஒன்றில் கூறினார் மோடி. தற்போது, சி.எம்.,மிலிருந்து, பி.எம்.,க்கு பயணித்து விட்டார். அதாவது, காமன் மேனிலிருந்து, "பர்பெக்ட் மேன்!'எல்லா தேர்தலிலும், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று முடிவு செய்யாத, எந்த கட்சியையும் சாராத மக்கள் இருப்பர். தேர்தல் சமயத்தில், எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என, நிர்ணயம் செய்யும் மக்கள் தான், வெற்றியை நிர்ணயம் செய்கின்றனர். மாற்றத்தை தான், எக்கட்சியையும் சாராத மக்கள் விரும்புவர். அவர்கள் ஓட்டு யார் பக்கம் என்பது, தேர்தல் வந்தால் தெரிந்து விடும்.
இமெயில்: asussusi@gmail.com
எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்