திருப்பூர்: திருப்பூரில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த, இருவரை, சொந்த நாட்டுக்கு அனுப்ப, கோர்ட் உத்தரவிட்டது. திருப்பூர் பகுதியில், வர்த்தகம், சுற்றுலா, மருத்துவ சிகிச்சைக்காக வரும் நைஜீரியர்கள், விசா காலம் முடிந்த பின், சொந்த நாடு திரும்பாமல், திருப்பூரில் தங்குவது வாடிக்கையாக உள்ளது. பனியன் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும், இவர்களில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. மேலும், பல பகுதிகளில், இவர்களால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, திருப்பூர் பகுதியில், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள, நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். திருப்பூர் போலீசார் நடத்திய சோதனையில், 23 பேர் பிடிபட்டனர். கோர்ட் உத்தரவுப்படி, சென்னை புழல் சிறையில், அவர்கள், அடைக்கப்பட்டனர். திருப்பூர் ஜே.எம்., எண் 1 கோர்ட்டில், வழக்கு விசாரணைக்காக, அவர்கள், மாஜிஸ்திரேட் ராமச்சந்திரன் முன், ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்தியாவுக்கான, நைஜீரிய நாட்டு அதிகாரி ஆஜராகி, "இந்தியாவில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள, தங்கள் நாட்டினரை,திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து,இருவரை, உடனடியாக, அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பவும், மீதமுள்ள, 21 பேரை, 22ம் தேதி வரை, சிறையில் அடைக்கவும், மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE