அரசியல் தலைவர்கள், தங்களை களத்தில் முன்னிலைபடுத்திக் கொள்ள, பல முயற்சிளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிறிய தவறு நேர்ந்தாலும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். ராகுலை பொறுத்தவரை, பரம்பரை தான் அவரது பலம். அப்பா, பாட்டி, கொள்ளு தாத்தா என அனைவரும் இந்திய பிரதமராகவும், காங்., தலைவராகவும் இருந்தவர்கள்.
அரசியலில் ஆர்வமில்லாமலிருந்த ராஜிவ், தாயார் இந்திரா படுகொலை காரணமாக, கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டியதிருந்தது. ராஜிவ் படுகொலைக்குப் பின், கட்சிப் பொறுப்பை சோனியா ஏற்றார். சோனியா சிகிச்øகாக வெளிநாட்டில் சிலகாலம் தங்க வேண்டியதிருந்ததால், கட்சி பொறுப்பு மறைமுகமாக ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது. பல மூத்த காங்., தலைவர்களும் ராகுலுக்கு ஆதரவாக இருந்தனர்.
அதிருப்தி தந்த 5வது தலைமுறை:
நேரு குடும்பத்திலிருந்து ஐந்தாவது தலைமுறையாக ராகுல் அரசியலுக்குள் நுழைந்தார். வந்த புதிதில் ராகுல் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காங்.,கின் நட்சத்திரமாக வலம் வந்தார். இருப்பினும் காங்.,கின் பத்தாண்டு கால ஆட்சியில், அதிருப்தியே மிஞ்சுகிறது.
முக்கிய பொறுப்பிலிருந்த ராகுல், கட்சியின் பெயரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. காங்.,கின் அடுத்த தலைவர் என்ற நிலையிலிருக்கும் ராகுலுக்கு, நாடு குறித்து தெளிவான பார்வை இருப்பதாக தெரியவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், பிரதமர் மற்றும் காங்., பொதுச்செயலர் எனும் இரட்டை அதிகார முறை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியின் பழைய கட்டமைப்பை, தற்போதைய நடைமுறைக்கு ஏற்றபடி மாற்றாததும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அரையிறுதி என கருதப்பட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில், ராகுல் முன்னிலை படுத்தப்பட்டார். இத்தேர்தலில் காங்., கட்சி மண்ணைக் கவ்வியது, ராகுல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
அதிகார வட்டம் ஏற்படுத்தும் பின்னடைவு:
சோனியா, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், தன் தலைமையில் ஒரு அதிகார வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார். இந்திரா, ராஜிவ் ஆகியோரும் இதுபோல கட்டமைப்பை வைத்திருந்தனர். சோனியாவின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள், ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இருப்பினும் ராகுல் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதுவும் அவருக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஐ.மு., கூட்டணி 2009ல் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது, காங்.,கிடம் ஒருவித அசட்டை உண்டானது. மக்கள் நம் பக்கம் என நினைத்துக் கொண்டனர். இதனால் எந்த ஒரு செயலையும் முனைப்போடு செய்யவில்லை. சோனியா, ராகுலின் தொகுதி இருக்கும் உ.பி.,யில் 1984க்குப் பின் காங்., ஆட்சி அமையவில்லை. இது, சோனியா, ராகுல் ஆகியோர் கட்சி முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இதனால் 2012 உ.பி., சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வியடைந்தது.
ராகுலின் தற்போதைய பேச்சுகள், குருட்டுத்தனமாக கட்சித் தலைமையை தன் கையில் எடுத்துக் கொண்டது போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சோனியா, ராகுல் என இருவரும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற எத்தகைய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவில்லை.
2014ன் சவால்கள்:
2014ம் ஆண்டு துவக்கம், காங்., கட்சிக்கும், ராகுலுக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், ராகுலுக்கும் இடையேயான நேரடி போட்டி எனும் எதிர்பார்ப்பு தான் அது.
2009ம் ஆண்டு ஆட்சியிலிருந்து காங்., கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வந்துள்ளது. 2014ல் முழுவதுமாக தேய்ந்து விட்டதாக ஒரு தோற்றம் இருக்கிறது. தன் மீதுள்ள அனைத்து சவால்களையும் காங்., கட்சியும், ராகுலும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை.
ராகுலுக்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் என்ன முடிவு வந்தாலும் ஏற்றுக் கொள்வது; இரண்டாவது, சோனியா தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு, இன்னும் வயது இருப்பதால் அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பது; மூன்றாவது, அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டு, குடும்ப நபர்கள் அல்லது கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது. இந்த மூன்று முடிவுகளில் ஒன்றை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ராகுல் இருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE